Saturday, 28 November 2015

இயற்கையின் விளைபொருளே மனிதன்….. !




நேபாளத்தில் கோரத் தாண்டவமும் வட இந்தியா, கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதிகளில் ஆங்கார நடனமும், தமிழகத்தில் மிக மெல்லிதாய் ஒய்யார நடனம் என்று ஆட்டம் போடுகிறாள் பூமித்தாய். நம் எல்லோரின் மனங்களும் ஆட்டம் காணத் தொடங்கி விட்டன. இங்குதான் சித்தர்களின் ’ஒரு பிடி மண்’ தத்துவம் மேலோங்கி எழுகிறது. அறிவியல் வளர்ந்திராத காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் கூட, ‘எல்லாமும் ஒரு பிடி மண்ணுக்குள் அடக்கம்’ என்று தலையிலடித்துச் சொன்னார்கள்.

சகலமும் சூனியத்திலிருந்துதான் பிறக்கிறது என்று ஒற்றை வடிவம் காணும் ஆன்மிக வாதமா அறிவியல்? பிளாஸ்டிக் தயாரிப்பின் கோடரி முனையில் ஏராளமான மரங்களல்லவா வெட்டப்படுகின்றன? வெட்டிப் போடப்பட்ட பச்சை மரங்களின் அழுகலில் தொழில் நுட்ப உரமிட்டு வளர்த்தெடுக்கப்படுபவையே பிளாஸ்டிக் பூக்கள்.

பூமி மனிதனின் தாய் கிரகம். அன்னமிட்டு அன்பைப் பொழிந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்த் தன்னை வளர்த்த பூமித்தாயைப் புறக்கணித்து விட்டு, இரும்பு தரித்த செயற்கை கிரகங்களின் மேல் அளப்பரிய நேச பாசம் வைத்திருப்பவனை எப்படி சக மனிதனாய் ஏற்க இயலும்?
”பூமி மனித குலத்தின் தொட்டில். ஆனால், மனிதன் அவனது தொட்டிலிலேயே நீண்ட நெடுங்காலத்துக்கு இருந்து விட மாட்டான்” என ருஷ்ய அறிஞனான கான்ஸ்ட்வோவ்ஸ்கி கூறிச் சென்று நூறாண்டுகள் கழிந்த பிறகே, மனிதன் தன் சொந்த எல்லைகளை மீறி விண்வெளி சென்றான்.

இன்று சந்திர மண்டலத்திலும் செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் வாழ்வதற்கும் அதற்கான வீடுகள் கட்டுவது குறித்தும் அங்கே தோட்டங்கள், பூங்காக்கள் அமைக்கும் முறை குறித்தும் அமெரிக்க விஞ்ஞானிகள் பேசத் துவங்கி காலம் பலவாச்சு; நாமும் அவர்களுடன் இணைந்தாச்சு. செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதாம்; இங்கு இருப்பவற்றை ஒட்டுமொத்தமாய் ஆழ்குழாய்த் துளையிட்டு உறிஞ்சி முடித்தாயிற்று. ஏன் அது அங்கே இருக்கிறது? அதற்காகவே புறப்படத் தயாராகி விட்டோம்.

விண்வெளியில் வெறுமனே ’கால் பதித்து’ வரவோ, அல்லது அங்கேயே தங்கி ‘குடும்பம் நடத்தவோ’ –எப்படியாக இருந்தாலும் சரி. விண்வெளிக்குச் செல்ல வெண்டுமென்றால், மனிதன் பூமியின் சூழலைத் தன்னுடன் கூடவே எடுத்துச் சென்றால்தான் அங்கு பிழைத்திருக்க முடியும். ஏனென்றால் மனிதன் ஒரு பூமி ஜீவி. பூமித் தாயுடன் தன்னைப் பிணைத்திருக்கும் தொப்புள்கொடியை அறுத்தெறிந்து விட்டு விண்வெளிக்குச் சென்று வாழ அவனால் முடியாது. மனிதனின் ஜீவநாடியாக விளங்கும் ’தாய் பூமி’ யின் மகத்துவம் குறித்து ஓர் ஆதிகால கிரேக்கக் கட்டுக்கதை இப்படிச் சொல்கிறது:

 ஆந்தேயூஸ் அவனது தாயாகிய பூமியை விட்டு நீங்காத வரை அவனை வெற்றி கொள்வது குறித்து எத்தகைய மாவீரனாலும் நினைத்தே பார்க்க முடியாது. கடுமையாகப் போரிடும் மகன் களைப்புற்றுத் தன்னைத் தழுவிக் கொள்ளும்போதெல்லாம், அவனின் அயர்வைப் போக்கிப் புதிதாய் அசுர பலமூட்டி வீறு கொண்டெழச் செய்வாள் தாய் பூமி. அப்படியொரு மந்திரத் தொடர்பு அவனுக்கும் பூமிக்கும். ஹெர்குலிஸ் அவனைக் காற்றிலே உயரே உயரே எறிந்து, அந்த மந்திரத் தொடர்பை அறுத்த போதுதான் வலுவிழந்து தளர்ச்சியுற்ற ஆந்தேயூஸைக் கொல்ல முடிந்தது.

இயற்கையின் எதிர்காலம் மீது காட்டப்படும் அக்கறை மனித குலத்தின் எதிர்காலம் மீதான அக்கறையாகும். இலாப வெறி கொண்டவர்களோ இயற்கையின் முடிசூடா மன்னர்களாய்த் தம்மைக் கற்பிதம் செய்து கொண்டு, இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாகச் சூறையாடுகிறார்கள். இயற்கை அதன் மேல் அடையப்படும் ஒவ்வொரு வெற்றிக்கும் பழி வாங்குகிறது. இயற்கையின் சமநிலைச் சீர்குலைவினால், இயற்கையின் சீற்றங்களினால் நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் மடிகிறார்கள். குழந்தைகளில் பலர் அவர்களின் முதலாமாண்டு பிறந்த நாளைக் காணாமலேயே செத்தொழிகிறார்கள். இயற்கையை அன்புடனும்  அறிவுடனும் அணுகாதவர்கள், நம் குழந்தைகளுக்கு எதிரிகளாவர். இயற்கையின் மீது அக்கறையுள்ள எஜமானனாக இல்லாதவர்கள் கர்ப்பத்திலிருக்கும் சிசுவையும் கொல்கிற பாவிகளாவர். 

எஜமானன் – அடிமை என்று வர்க்கங்கள் தோன்றியபோதே இயற்கையின் அறிவார்ந்த பயனீடும் இல்லாமல் போனது. உணவு உடை உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாதவர்கள், சாவின் விளிம்பு வரை உழைக்க நிர்பந்திக்கப்படுபவர்கள் ’சூழ்நிலைக் களங்கம்’ பற்றி வருந்தியழவும் வாதம் புரியவும் கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை.

தான் வேலைக்கு அமர்த்திய மற்றொரு மனிதனை – அடிமையை – மிக இழிவாய் நடத்துகிற எஜமானன் இயற்கையையும் ஒரு தாழ்ந்த அடிமையாய்க் கருதுகிறான். என்றுமே வாழாத தம்மை மறுபடியும் சாகடிக்கவே எஜமானன் முயல்வதால், எஜமானன் மீதான கோபத்தை நிலத்தின் மேல் கடப்பாரையாய், மரத்தின் மேல் கோடரியாய் அடிமை சுழற்றி வீசுகிறான். தமக்கே ஓர் எதிர்காலம் இல்லாததால் இயற்கையின் எதிர்காலம் பற்றியோ, அழகுச் சூழல் அழிவது பற்றியோ அவன் கவலைப்படுவதில்லை. மனித சமூகத்தின் சமச்சீரின்மை இவ்விதம் இயற்கைக்கு விரோதமான குரூரமான அறிவற்ற மனப்பான்மையை வளர்த்து விடுகிறது. இந்தச் சமூகப் பகைமைகளுக்குத் தீர்வு காணாத வரை, இயற்கை – மனிதன் இடையிலான உறவில் முரண்பாடு ஒழிந்து லயம் எய்தப்படுவது சாத்தியமேயில்லை.  

இயற்கையுடனான லயம் கெட்டு மனிதன் சிருஷ்டிக்கும் கலை அவனுடைய வாழ்வு ஊனமடைந்திருப்பதையே குறிக்கும். இயற்கையுடன் முரண்பட்டு இயல்பு வாழ்க்கையிடமிருந்து  தனிமைப்படும் கலை வளர்ச்சியைக் குறிப்பதாகாது. கலாபூர்வமான படைப்புகள் யாவும் பிரதிபலிப்பது எதார்த்தத்திலும் அதன் உள்ளேயும் காணப்படும் அழகின் சேகரிப்புகளையே.

இன்னமும் தெளிவாகப் புலப்படாத சூனியத்தின் மீது கேள்விகளை எழுப்பும் அறிவியலுக்கு, ஏற்கனவே துலங்கி வரும் உண்மைகள் மீது கேள்விகளை எழுப்பும் கலை கண்டுபிடிப்புகளுக்கான உந்து விசையாகத் திகழ்கிறது.
 “நாளைய மறுநாளின் கவிஞர்கள், தங்களின் உவமைகளை உருவகங்களை ஒப்புமை அணிகளைத் தொழில்நுட்ப அறிவியலில்தான் தேடுவார்கள். தொழில் நுட்ப வளர்ச்சியால் நம் புலன் உறுப்புகள் கவர்ந்திழுக்கப்பட்டு, இயல்பான சிந்தனை முறை மாறும். புறப்பொருட்கள் அவற்றின் தனிப் பெயர்களை இழந்து, உருவமற்ற கருத்தியல் கோட்பாடுகளே நமது அந்தரங்க வாழ்க்கையை இயக்கும். இந்தச் சிந்தனை முறை நுண்ணியதாய் உலகு தழுவியதாய் இருக்கும். வண்ணங்களற்ற வெறுமையான சிந்தனை இடுகுறிகளால் நிறைந்துள்ள எலக்ட்ரானிக் மூளையை மனிதன் பெறுவான்.”

இவை இயற்கை – மனித உறவில் லயம் கெட்டழிந்தவர்களின் பிதற்றல்களே. உண்மையில், மனித சிந்தனைத்திறன் இலட்சோப லட்சம் மெல்லிய இழைகளால் இயற்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலுடன் அறுக்க முடியாத பந்தத்தைக் கொண்டவனாகவே மனிதன் இருக்கிறான். ஏனெனில் இயற்கைச் சூழலுடன் இணைந்து வளர்ந்துள்ள ‘இயற்கையின் விளைபொருளே’ மனிதன். 

எலெக்ட்ரானிக் மூளை கூட மனித மூளையின் சிருஷ்டிதான். இன்னும், எண்ணிலடங்கா ரகசியக் குவியல்களும் வினோதங்களும் நிறைந்த புதிராகவே மனித மூளை திகழ்கிறது. தன் இறுதி நாட்களில் அழகை ரசிப்பது சலித்துப் போன நிலையில் டார்வின் இப்படிச் சொன்னார்:

“மீண்டும் புதிதாக வாழ்வேனாகில் அழகு – ரசனைத் திறனுடன் சம்பந்தப்பட்டிருக்கும் மனித மூளையின் பகுதிகளை, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்வேன். மனத்தில் சந்தோஷத்தை இழக்கும்போதுதான் அழகைச் சுவைத்தறியும் திறனை இழந்து போகிறோம். இயற்கை அழகு நம்மில் எழுப்பும் உணர்ச்சிகள் மழுங்கடிக்கப்படும்போது நேரும் ‘ரசனை இழப்பால்’ நமது மூளையின் அறியும் திறனும் குணநலமும் பெரும்பாலும் பலத்த பாதிப்புக்குள்ளாகும்.”
இயற்கை அழகு காணக் கிடைக்காத ஒன்றாகிப் போனால், ‘பட்டணத்து பூதங்கள் நிறைந்த கான்க்ரீட் வனத்திலிருந்து‘ தப்பித்து ஓடத்தானே விரும்புவோம்? இயற்கையை அழித்து எழுப்பப்படும் செயற்கை உலகின் சௌந்தரியங்களைக் (!) காண்பதில், சூம்பிப் போன போன்சாய் மரங்களையும் சுவர்ப் படங்களில் விரியும் இயற்கைக் காட்சிகளின் நகலையும் காண்பதில் மனித மனம் நிறைவு கொள்ளுமோ? திசைகள் நான்கிலும் சூழ்ந்திருந்த இயற்கை வண்ணங்களின் ரசம் அனைத்தையும் இழந்து விட்ட வெற்றுக் கண்ணாடியாய்த் தொழில் நுட்பம் மானுடச் சூழலை மாற்றிய பின், இயற்கைக்கு அந்நியர்களான இச்சூழலை விட்டு, ‘பூக்களின் குழந்தைகள் நாங்கள்’ என்ற அறிவிப்புடன் தொலைதூரப் பிரதேசங்களுக்கு இயற்கை அன்னையின் மடியிலமர்ந்து களித்திருக்க நாகரிகக் கூட்டம் செல்கிறது.  

இந்த பூமி முழுவதையும் தொழில் நுணுக்கம் ஆதிக்கம் செலுத்தும் நாள் வரலாம். ஆனால், சமூகம் மீதான தொழில் நுணுக்க ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க, இயற்கை மென்மேலும் அதிகமாகவே தேவைப்படும். மனிதனின் சொந்தக் கரங்களின் மாபெரும் சிருஷ்டியாகிய செயற்கை – உலகின் இரண்டாவது இயற்கையின் – முக்கியத்துவத்தையும் குறைத்துக் கூறுவதற்கில்லை.

தொழில் நுட்பம் பார்வையற்றவனுக்குக் ‘காணும் – கால்’ அல்லது கண்ணாடியாய் இருக்கிறது. மனநோயாளிக்கு மனநல மருந்தகமாய் விளங்குகிறது. இவ்வசதிகளை இழக்க நாம் விரும்ப மாட்டோம். ஆனால், தொழில் நுணுக்கத்தால் இயற்கையின் பணிகளனைத்தையும் ஏற்றுச் செய்ய இயலாது. ஒரு பழமொழி சொல்வது போல, ‘அரசனுக்கு உரியவற்றை அரசனுக்குக் கொடு; ஆண்டவனுக்கு உரியவற்றை ஆண்டவனுக்குக் கொடு.”
மாறாக, இயற்கையையும் தொழில் நுட்பத்தையும் – கலையையும் அறிவியலையும் ஒன்றிற்கொன்று போட்டி சக்தியாக நிறுத்துகிற அந்த விநாடியிலிருந்தே அவற்றின் பயன்பாடு அறிவுபூர்வமற்றதாகி விடுகிறது. இயற்கைக்கும் கலைக்கும் அனுசரணையாக இல்லாமல் தனது தனிச் செல்வாக்கை நிலை நிறுத்த முயலும் தொழில் நுட்ப – அறிவியலால் மனித வாழ்வின் ஆதாரமான மகிழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, 
புகைப்படக்கலையின் பிரமாண்டமான வருகை ஓவியக் கலையை ஒழித்துக் கட்டி விட்டதா என்ன ? ராக் இசையின் தோற்றம் நம் தோட்டத்துக் குயில்களைச் சுட்டுத் தள்ளவா எழுகிறது? கேமரா, காட்சிகளை அழகிய முறையில் நகலெடுத்துத் தருகிறது. ஓவியத்திலோ ஒரு கலைஞனின் ஆன்மா சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
தானே சிந்திக்கும் திறனற்ற ஒரு செயற்கை ஜீவனால், கம்ப்யூட்டரால் நம் இதயத்தை உருக வைக்கும் ஒரு காதல் கவிதையை எழுதித் தர இயலுமா? அது கவிதை எழுதவும் மனிதர்களே சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. கலைத்துவத்தின் நகல் செய்ய முடியாத தனித்தன்மை அதற்கில்லை.

குளிரூட்டப்பட்ட அறைகள் இதமான குளிர்ச் சூழலை அளிக்கலாம். ஆனால், அருவியில் குளித்து  சோலை புகுந்து மலர்களின் வாசத்தோடு நம்மைக் கடக்கும் தென்றலை, அது தரும் சுகத்தை எந்தக் குளிரூட்டியாலும் வழங்க இயலாது. அறிவியல் தொழில்நுட்பம் ‘மனிதாபிமானம்’ கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும், இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே முரண்பாடுகள் ஏதுமற்ற இணக்கம் உருவாக வேண்டும் என்பதும் இன்றைய காலத்தில் வெற்று முழக்கமல்ல; மனிதனை, வாழ்க்கையை, எதிர்காலத்தை நேசிப்பவர்களின் வேண்டுகோள்; கட்டளை…!

அம்ருதா, ஜூன் 2015     

பா.ஜீவசுந்தரி

       


No comments:

Post a Comment